இலங்கையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் 'ஸ்மார்ட்' வகுப்பறைத் திட்டங்கள் நாட்டின் தற்போதைய நிலையை கருத்தில் கொள்ளாமல் முன்னெடுக்கப்படுவதாக தாய்மார்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் நிதிக்ஷணா தர்ஷனி லஹந்தபுர கவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கையிலுள்ள 10,155 பாடசாலைகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை கிராமப்புறங்களில் அமைந்துள்ள நிலையில், அடிப்படை வசதிகளான கழிப்பறைகள், ஆய்வுக்கூடங்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட இல்லாத பல பாடசாலைகளில் இவ்வாறான நவீன திட்டங்களை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது என அவர் குறிப்பிட்டார். மழையில் நனையும் பாடசாலை கட்டிடங்களையும் நீண்ட தூரம் நடந்து கல்வி கற்க வரும் மாணவர்களையும் கொண்ட சமூகத்தில், டிஜிட்டல் முறையிலான கற்றலை மட்டும் முன்னெடுப்பது ஏழை மாணவர்களை கல்வியில் இருந்து அந்நியப்படுத்தும் செயலாகும்.
குறிப்பாக, பாடப்புத்தகங்களை வழங்குவதற்குப் பதிலாக மாணவர்களை அச்சுப்பிரதிகளை (Printouts) எடுத்துக்கொள்ளுமாறு கோருவது வறிய பெற்றோர்களுக்கு தாங்க முடியாத மேலதிக நிதிச் சுமையை ஏற்படுத்தும் எனவும், இது கொரோனா காலத்தில் இணைய வசதி இன்றி மாணவர்கள் எதிர்நோக்கிய சிரமங்களை மீண்டும் நினைவுபடுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு போன்ற நகரங்களில் அதிவேக இணைய வசதி கொண்ட மாணவர்களுக்கு இத்திட்டம் சாதகமாக அமைந்தாலும், சிக்னல் வசதி கூட இல்லாத கிராமப்புற மாணவர்களுக்கு இது பாரிய பாரபட்சத்தை உருவாக்கும். அத்துடன், புதிய பாடத்திட்டங்களில் வரலாறு மறைக்கப்பட்டுள்ளதாகவும், எல்.ஜி.பி.டி.க்யூ (LGBTQ) போன்ற விடயங்கள் உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர், பாடத்திட்டங்களில் பல எழுத்துப் பிழைகள் மற்றும் தவறுகள் காணப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
கல்வியில் நிலவும் கடுமையான போட்டித்தன்மை மற்றும் பல்கலைக்கழக அனுமதியில் நிலவும் சிக்கல்களுக்குத் தீர்வுகாணாமல், இவ்வாறான நடைமுறைக்குச் சாத்தியமற்ற சீர்திருத்தங்களை அரசாங்கம் உடனடியாக மீளப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் கிராமப்புற மாணவர்களைப் புறக்கணிப்பதாக தாய்மார்கள் முன்னணி சாடல்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space