இலங்கையில் தினசரி சுமார் 100 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும், அதேவேளை புற்றுநோய் காரணமாக நாளொன்றுக்கு சுமார் 40 நோயாளிகள் உயிரிழப்பதாகவும் சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான இலங்கையின் பிரதான மத்திய நிலையம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த மத்திய நிலையம் வைத்தியசாலையின் வெளிநோயாளி பிரிவில் (OPD) உள்ள தொற்றுநோய் சிகிச்சை கிளினிக் கட்டிடத்தின் முதலாவது மாடியில் அமைந்துள்ளது.

அடையாளம் காணப்படும் நோயாளிகளை அவசர சிகிச்சைக்காக உடனடியாக நிபுணர் கிளினிக்குகளுக்கு பரிந்துரைக்கும் முறைமையும் இந்த வசதியில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த புற்றுநோய் ஆரம்ப கண்டறிதல் மத்திய நிலையம், அரசாங்க விடுமுறை தினங்கள் தவிர்த்து, வார நாட்களில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை பொதுமக்களுக்காக திறந்திருக்கும்.