கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் மனிதவள வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், 162 புதிய பயிற்சி அதிகாரிகள், சிரேஷ்ட உபதேசிகர்கள் மற்றும் உபதேசிகர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (20) பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் நலின் ஹேவகே,
பல வருடங்களாக நிலவி வந்த மனிதவளப் பற்றாக்குறை காரணமாக நிறுவனத்தின் சேவை வழங்கல் திறனில் ஏற்பட்டிருந்த தாக்கங்களைக் குறைத்து, தீவு முழுவதிலும் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு தரமான மற்றும் காலத்துக்கேற்ற தொழிற்பயிற்சியை வழங்குவதற்குத் தேவையான வலுவான மனிதவள அடித்தளத்தை உருவாக்குவதே இந்த நியமனங்களின் முதன்மை நோக்கமாகும்.
நியமனங்களைப் பெற்றுக்கொண்டவர்கள் இதனை வெறும் தொழிலாக மட்டும் கருதாமல் நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் ஒரு தேசியப் பொறுப்பாகக் கருதிச் செயற்பட வேண்டும்.
தொழிற்கல்வியை வலுப்படுத்துவதன் மூலம் திறமையான, நிபுணத்துவம் மிக்க மற்றும் போட்டியிடும் திறன் கொண்ட மனிதவளத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என்றும், அதில் இந்த புதிய அதிகாரிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
மேலும், மக்கள் சேவைக்காக தொழில்முறைத் திறன், அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புணர்வுடன் செயற்பட்டு நாட்டின் வளர்ச்சிக்குப் பங்காற்றும் அரச ஊழியர்களாக மாறவேண்டும் என்றார்.