மஹர சிறைச்சாலையில் (01) நேற்று சனிக்கிழமை  ஏற்பட்ட திடீர் மோதல் மற்றும் அமைதியின்மை காரணமாகச் சிறைச்சாலை வளாகத்தில் பெரும் பதற்ற நிலை உருவானது. இச்சம்பவத்தின் போது கைதிகள் சிலர் சிறைச்சாலையின் ஒரு பகுதி கட்டடத்திற்குத் தீ வைத்ததில் சிறைச்சாலையின் சொத்துகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலின் போது படுகாயமடைந்த 7 கைதிகள் உடனடியாக ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சைப் பலனின்றி ஒரு கைதி உயிரிழந்துள்ளார்.

கைதிகள் தீ வைத்ததில் சிறையின் தற்காலிக மற்றும் முக்கியமான கட்டடப் பகுதிகள் மற்றும் சொத்துக்கள் தீக்கிரையாகி சேதமடைந்துள்ளன.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரப் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் , இராணுவம் மற்றும் கடற்படையினர் சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.  சிறைச்சாலைக்கு வெளியேயும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.