சிறிலங்காவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2026 மார்ச் மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

2025 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு மார்ச் மாதத்தில் 9.7 சதவீதக் குறைவு பதிவாகியுள்ளது.

2025 மார்ச் மாதத்தில் 183,979 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நிலையில், 2026 மார்ச் மாதத்தில் அந்த எண்ணிக்கை குறைந்துள்ளதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

சமீபத்திய தரவுகளின்படி, அதிகளவு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். அவர்கள் 47,533 பேர் (26%) என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியம் (18,092), ரஷ்யா (15,685), சீனா (14,064), ஜேர்மனி (13,429) மற்றும் பிரான்ஸ் (8,359) ஆகிய நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

மேலும், 2026 ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை நாட்டுக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 740,634 ஆக பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.