வெலிகம, கம்மல்கொட பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கித் தந்தை உயிரிழந்துள்ளதோடு, அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (14) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிகம, கொலேதண்ட பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் இதன்போது அவரது 22 வயதுடைய மகன் காயமடைந்துள்ளார்.


தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் தமது கால்நடைகளைக் கட்டுவதற்காகச் சென்றிருந்த போதே, அருகிலுள்ள காணி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கியதில் இந்த சம்பவம்  இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மின்சாரக் கம்பியைப் பொருத்திய சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.