முல்லைத்தீவு முள்ளியவளை அஞ்சல் அலுவலகத்தின் காணியை எதிர்வரும் ஜூலை மாதமளவில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக இராணுவத்தினரால் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) நடைபெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில், இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால், இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள முள்ளியவளை அஞ்சல் அலுவலக காணி தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
முல்லைத்தீவு முள்ளியவளை அஞ்சல் அலுவலகம் தனியார் வாடகை கட்டிடமொன்றில் நடத்திச் செல்லப்படுகின்றது. அந்த தபால் அலுவலகத்திற்கான காணி இப்போது இராணுவத்தின் 23ஆம் படையணியினால் பயன்படுத்தப்படுகின்றது. அந்த காணியை 2026 ஜுலை மாதமளவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவத்தினரால் வாய்மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தபால் திணைக்களம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
2027ஆம் ஆண்டில் அந்த தபால் அலுவலகத்தை நிர்மாணிப்பதற்கான நிதியை ஒதுக்க முடியுமாக இருக்கும்.வடக்கில் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக இடம்பெற்று வருகின்றன. அதன்படி குறித்த அஞ்சல் நிலைய காணியை துரிதமாக விடுவித்து அந்த இடத்தில் அஞ்சல் நிலையத்தை நடத்திச் செல்லத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என்றார்.