சர்வதேச நாணய நிதியத்தின் சுமார் 3 பில்லியன் டொலரை பெற்றுக்கொள்வதற்காக ஒட்டுமொத்த மக்களும் இன்று நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். முழு நாடும் நாணய நிதியத்தின் கடன் பொறிக்குள் சிக்குண்டுள்ளது. 2027 ஆம் ஆண்டுடன் நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட செயற்திட்டம் நிறைவடையவுள்ளது.அதன் பின்னர் பொருளாதார நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்திடம் உள்ள திட்டம் என்னவென்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கேள்வியெழுப்பினார்.

தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் புதன்கிழமை (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெற்று மாத்திரம் நாட்டை நிர்வகிக்கலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது. 695 மில்லியன் டொலர் கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.அரசாங்கம் இதனை பெருமையாக குறிப்பிடுகிறது.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 695 மில்லியன் டொலர் 3 எரிபொருள் கப்பல்களை கொள்வனவு செய்வதற்கு மாத்திரமே போதுமானதாக இருக்கும் அதன் பிறகு எவ்வாறு வெளிநாட்டு கையிருப்பை தக்கவைத்துக் கொள்வது என்பது குறித்து அரசாங்கத்திடம் எவ்வித திட்டங்களும் கிடையாது.

கடந்த காலங்களில் இலகு வட்டி வீதத்தின் அடிப்படையில் தான் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் பெற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது 5.3 சதவீத வட்டி வீதத்தில் கடன் பெற்றுக்கொள்ளப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் சுமார் 3 பில்லியன் டொலரை பெற்றுக்கொள்வதற்காக ஒட்டுமொத்த மக்களும் இன்று நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். முழு நாடும் நாணய நிதியத்தின் கடன் பொறிக்குள் சிக்குண்டுள்ளது. 2027 ஆம் ஆண்டுடன் நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட செயற்திட்டம் நிறைவடையவுள்ளது.அதன் பின்னர் பொருளாதார நடவடிக்கைக்கான திட்டம் என்ன ?

சர்வதேச நாணய நிதியத்தின் மீண்டுமொரு நீட்டிக்கப்பட்ட செயற்திட்டத்துக்குள் செல்வதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுக்க கூடாது.அவ்வாறு செல்வது மக்கள் மிக மோசமான நெருக்கடிக்குள் தள்ளுவதாக அமையும் என்றார்.