புதிய மேலதிக வரிவிதிப்பிற்கமைய மே 16ஆம் திகதிக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் கடன் பத்திரம் திறக்கப்பட்ட வாகனங்களின் விலைகளை எக்காரணத்துக்காகவும் அதிகரிக்க முடியாது. புதிய மேலதிக வரியை அடிப்படையாகக் கொண்டு சில இறக்குமதியாளர்கள் விலைகளை அதிகரிப்பது மோசடியானது. இது குறித்து மக்கள் தெளிவுடன் இருக்க வேண்டும் என பதில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (16) கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த வாரம் நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, மே 16ஆம் திகதிக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலைகளை எக்காரணத்துக்காகவும் அதிகரிக்க முடியாது. அதேபோன்று மே 16ஆம் திகதிக்கு முன்னர் கடன் பத்திரம் திறக்கப்பட்ட வாகனங்களுக்கும் இந்த புதிய மேலதிக வரிக் கட்டணம் பொறுந்தாது.
இந்த புதிய மேலதிக வரி விதிப்பும் தற்காலிகமானதாகும். 3 மாதங்களுக்கு மாத்திரமே இது நடைமுறைப்படுத்தப்படும். வாகன இறக்குமதியால் ஏற்படும் பாரியளவிலான டொலர் இழப்பினை தடுப்பதற்காகவே இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இரு வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
நாம் ஆட்சியைக் கைப்பற்றிய போது எவருக்கும் எந்தவொரு வாகனத்தையும் இறக்குமதி செய்ய முடியாத நிலைமை காணப்பட்டது. புதிய அரசாங்கத்தின் கீழ் தான் மீண்டும் வாகன இறக்குமதிக்கு அனுமதியளிக்கப்பட்டது.
புதிய மேலதிக வரி விதிப்பு தனிப்பட்ட உபயோகத்துக்கான வாகனங்களுக்கு மாத்திரமே விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் 16ஆம் திகதிக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்படுகின்றன என்றால் அது இந்த புதிய தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு சில இறக்குமதியாளர்களால் முன்னெடுக்கப்படும் மோசடிமாகும். இது தவறாகும். இது தொடர்பில் தெளிவுடன் செயற்படுமாறு மக்களை அறிவுறுத்துகின்றோம்.