யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில், வவுனியா ஈரற்பெரியகுளம் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி காயமடைந்துள்ளதாக ஈரற்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த சொகுசு பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது பெரியஉளுக்குளம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர், தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் கணவர் உயிரிழந்துள்ளதுடன், பலத்த காயமடைந்த அவரது மனைவி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான சொகுசு பேருந்தின் ஓட்டுநர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து ஈரற்பெரியகுளம் பொலிஸாார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.