பணசுத்திகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்ததாகக் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை  மீண்டும் எதிர்வரும் ஏப்ரல் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் திங்கட்கிழமை (9) உத்தரவிட்டது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் இவ்வழக்கு நேற்று  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, அரச தரப்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி ஒக்ஸ்வொல்ட் பெரேரா, பிரதிவாதியான டெய்சி பொரஸ்ட் என்பவர், வழக்கு விசாரணையொன்றில் முன்னிலையாவதற்குப் போதுமான மனநிலையில் இருக்கின்றாரா என்பது தொடர்பில் கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரி ஊடாகக் கோரப்பட்டிருந்த விசேட மருத்துவ அறிக்கை இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என சுட்டிக்காட்டினார். இதற்கமைய, குறித்த மருத்துவ அறிக்கை கிடைக்கும் வரை வழக்கை விசாரிப்பதற்கு பிறிதொரு திகதியை வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

மன்றில் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, வழக்கை மீண்டும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டார்.    2009 மார்ச் 31 ஆம் திகதிக்கும் 2013 டிசம்பர் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் சட்ட விரோதமாக சம்பாதித்த 59 மில்லியன் ரூபாவை 3 வங்கிக் கணக்குகளில் நிலையான வைப்பாக வைத்திருந்ததன் ஊடாக கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்துள்ளதாக  குற்றம் சுமத்தி சட்டமா அதிபரால் இவர்களுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.