வங்கதேச விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஹசன் மஹ்மூத் கான், தனது சமீபத்திய பாகிஸ்தான் பயணத்தின் போது பாகிஸ்தானிடமிருந்து ஜேஎஃப்-17 பிளாக்-3 போர் விமானங்களை 'வாங்குவதில் ஆர்வம்' காட்டியுள்ளார்.



ஜேஎஃப்-17 தண்டர் பிளாக்-3 என்பது ஆக்டிவ் எலக்ட்ரானிக்கலி ஸ்கேன்ட் அரே ரேடார் மற்றும் லாங் ரேஞ்ச் BVR (பியாண்ட் விசுவல் ரேஞ்ச்) ஆகியவற்றைக் கொண்ட 4.5-ஆவது தலைமுறை போர் விமானமாகும், இது பல்வேறு வகையான போர் நடவடிக்கைகளில் பங்கேற்கும் திறன் கொண்டது.



சீனாவின் உதவியுடன் இந்த விமானங்களைத் தயாரிக்கும் திறனை பாகிஸ்தான் பெற்றுள்ளது. பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த போர் விமானம் ஒரு குறைந்த எடை கொண்ட, நான்காம் தலைமுறை விமானமாகும்; இவை இந்தியாவுடனான 2019 மற்றும் மே 2025 பதற்றமான காலங்களில் பயன்படுத்தப்பட்டன.



பாகிஸ்தான் இதுவரை அஜர்பைஜான், மியான்மர் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு இந்த ஜெட் விமானங்களை விற்பனை செய்துள்ளது. இராக் மற்றும் லிபியா உள்ளிட்ட பல நாடுகளுடன் இந்த விமான விற்பனை ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.



இந்த விமான விற்பனைக்கான ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை என்றாலும், "அவர்கள் இதை வாங்குவதில் ஆர்வம் காட்டியுள்ளனர் மற்றும் இது குறித்து எங்களிடையே நீண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது," என்றும் பாகிஸ்தான் விமானப்படையின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் கூறினார்.
பாகிஸ்தான் விமானப்படையின் கூற்றுப்படி, செவ்வாய்க்கிழமை நடந்த சந்திப்பில், "பாகிஸ்தான் ஏர் சீஃப் மார்ஷல் ஜாஹிர் அகமது பாபர் சித்து, பயிற்சி விமானங்களை விரைவாக வழங்குவதுடன், முழுமையான பயிற்சி அமைப்பு மற்றும் நீண்டகால தொழில்நுட்ப உதவியை வழங்குவதாகவும் உறுதியளித்தார்."


வங்கதேச விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஹசன் மஹ்மூத் கான் தலைமையிலான உயர்மட்ட பாதுகாப்புத் தூதுக்குழு இஸ்லாமாபாத்தில் உள்ள விமானப்படைத் தலைமையகத்திற்குச் சென்றது, அங்கு அவர்கள் பாகிஸ்தான் விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஜாஹிர் அகமது பாபர் சித்துவைச் சந்தித்தனர்.



விமானப்படை வெளியிட்ட அறிக்கையின்படி, "சந்திப்பில் செயல்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் நிறுவன ரீதியான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது குறித்து வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக பயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் வான்வெளி துறையில் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது."