வடக்கு மாகாண நிர்வாக உத்தியோகத்தர்களுக்குத் தனித்துவமான புதிய இடமாற்றக் கொள்கையொன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் இணக்கம் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கத்தின் வடபிராந்தியக் கிளையினருக்கும், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினருக்குமிடையில் இன்று செவ்வாய்க்கிழமை (17.02.2026) மாலை யாழ். சுண்டுக்குளியிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

தற்போது முகாமைத்துவ அலுவலர்கள் சேவைக்கான பொதுவான இடமாற்றக் கொள்கையே பின்பற்றப்பட்டு வருகின்றது. இந் நிலையில் அதிசிறப்புத் தர முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கென தனியானதொரு இடமாற்றக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்ற மேற்படி சங்கத்தின் கோரிக்கையை வடக்கு மாகாண ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.