சட்டவிரோதமான முறையில் சுமார் 03 கோடி ரூபாய் பெறுமதியுடைய சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளை கொண்டுவந்த சீனப் பிரஜை ஒருவர் இன்று திங்கட்கிழமை (20) அதிகாலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
35 வயதுடைய இவர் இலங்கைக்கு வருகை தரும் மூன்றாவது சந்தர்ப்பம் இதுவெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 12.55 மணியளவில் தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து தாய் ஏர்வேஸ் (TG-307) விமானம் மூலம் இவர் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளார்.
அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் Green Channel ஊடாக வெளியேற முயன்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, அவரது 13 பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 229,800 சீனத் தயாரிப்பு சிகரெட்டுகள் (1,149 கார்ட்டூன்கள்) கைப்பற்றப்பட்டன. அவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 03 கோடியே 44 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை தடுத்து வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகள், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.