நுவரெலியா மாநகர சபை எல்லைக்குட்பட்ட கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள பி.டபிள்யூ.டி லயன் குடியிருப்புத் தொகுதியில், சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகளின் கூரைகள் மாற்றப்படாமல் இருந்ததால், அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக மழைக்காலங்களில் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.
இந்த பிரச்சினைக்கு இதுவரை ஆட்சி செய்த எந்த அரசாங்கமும், அப்பகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய மாநகர சபை உறுப்பினர்களும் உரிய தீர்வை வழங்காத நிலையில், நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் சுப்பிரமணியம் ஆனந்தராஜின் முயற்சியின் பேரில், தேசிய மக்கள் சக்தி அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பழைய கூரைகள் அகற்றப்பட்டு புதிய கூரைகள் அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்று (09) வியாழக்கிழமை நடைபெற்ற நுவரெலியா மாநகர சபையின் மாதாந்த அமர்வில், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்திய தேசிய மக்கள் சக்தி அரசுக்கும், நுவரெலியா மாநகர சபையின் ஆளும் தரப்பு உறுப்பினர்களுக்கும் மாநகர சபை உறுப்பினர் சுப்பிரமணியம் ஆனந்தராஜ் தனது நன்றியைத் தெரிவித்தார்.