2009ம் ஆண்டு நடைபெற்ற விமான விபத்தில் ஏர் பிரான்ஸ் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்கள் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான விமானம்
2009ம் ஆண்டு ஜூன் 1ம் திகதி ரியோ டி ஜெனிரோவில் இருந்து பாரிஸ் நோக்கி புறப்பட்ட AF447 விமானம் புயலில் சிக்கி 38,000 அடி உயரத்தில் இருந்து அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்து நொறுங்கியது.
இந்த பயங்கர சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 216 பயணிகள் மற்றும் 12 விமான குழு ஊழியர்கள் என மொத்தம் 228 நபர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விமான விபத்தில் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் பிரான்ஸ், பிரேசில் மற்றும் ஜேர்மன் நாட்டு குடிமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 2009ம் ஆண்டு நடைபெற்ற விமான விபத்திற்கு ஏர் பிரான்ஸ் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்கள் தான் காரணம் என்று பாரிஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் தீர்ப்பில், இரண்டு விமான நிறுவனங்களின் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டு இருப்பதாகவும், அவர்கள் குற்றவாளிகள் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஏப்ரல் 2023ல் அவர்களை விடுதலை செய்யுமாறு வழங்கப்பட்ட தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 8 வாரங்களாக நடைபெற்ற விசாரணையில், சம்பந்தப்பட்ட இரண்டு விமான நிறுவனங்களும் விபத்திற்கு தாங்கள் காரணமில்லை என கூறிவந்த வாதத்தை நீதிமன்றம் முற்றிலுமாக நிராகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தீர்ப்பின் படி, இரு நிறுவனங்களுக்கும் தலா 225,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.