சீன சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கடத்திவந்த சீனப் பெண் ஒருவர் இன்று திங்கட்கிழமை (03) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின்  அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் சீனாவின் செஜியாங்  மாகாணத்தைச் சேர்ந்த 44 வயதுடைய அழகுக்கலைஞர்  என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் குறித்த சிகரெட்டுகளைச் சீனாவில் கொள்முதல் செய்து, மலேசியாவின் கோலாலம்பூருக்குச் சென்று, அங்கிருந்து மலேசியன் எயர்லைன்ஸ்  சேவைக்குச் சொந்தமான எம்.எச் 179 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அவரது பயணப் பைகளை சோதனையிட்ட போது, சீனத் தயாரிப்பான 102 சிகரெட் கார்ட்டூன்களில்  மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 30 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான 20,400 சிகரெட்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட சிகரெட் தொகுதியும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில்  பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்