கடந்த கால அரசாங்கங்களில் நடந்த மோசடிகள் தொடர்பில் கோப் குழுவில் விசாரிக்கும் அரசாங்கம், தற்போதைய ஊழல் மோசடிகளை மறந்துவிட்டது. 323 கொள்கலன்கள் தொடர்பான செயற்குழுவின் விசாரணைகள் வெளிப்படையான தன்மையில் இடம்பெறுவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் ஹப்புஹாமி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற கோப் குழு அறிக்கைகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

கோப் குழுவில் சில காலத்திற்கு முன்னர் குறிப்பிட்ட நிறுவனங்களில் இருந்த தவறுகள் தொடர்பில் கதைக்கப்படுகின்றது. ஆனால் முறைமை மாற்றம் என்று கூறி வந்துள்ள இந்த நேரத்தில் ஏன் புதிய விடயங்களை விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்வதில்லை.

நிலக்கரி மோசடி தொடர்பான விடயத்தை எடுக்கலாம். இது எவ்வாறு நடந்தது என்று பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருக்கலாம். அத்துடன் 2.5 மில்லியன் டொலர் கொள்ளை மற்றும் 323 கொள்கலன் விவகாரம் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும். இவற்றில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். இது தொடர்பில் நடக்கும் விசாரணைகள் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவிக்கும் வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

இதேவேளை அரச நிறுவனங்கள், அரசியல்மயப்படுத்தும் செயற்பாடுகள் நடக்கின்றன. அரசாங்கத்தின் ஏதேனும் நிறுவனத்திற்கு தமக்கு நெருக்கமானவர்களை நியமிப்பது தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டு பாராளுமன்றத்தில் வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அண்மையில் சிறைச்சாலையில் நடந்த சம்பவம் தொடர்பில் கூறும்போது பாதாள உலக கும்பல்களுக்கு இடையே சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வியாபாரம் நடப்பதாக கூறப்பட்டது. நீங்கள் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களாகின்றது. ஆனால் போதைப்பொருள் நாட்டுக்கு வருவதனை தடுக்க ஏதாவது முறையான வேலைத்திட்டம் இருக்கின்றதா?

சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வியாபாரம் நடப்பதாக நீங்கள் எவ்வாறு கூற முடியும்? சிறைச்சாலையில் கைதிகள் இறப்பதற்கும், அதிகாரிகள் இறப்பதற்கும் உங்களின் தவறுகளே காரணம் என்பதனைக் கூற வேண்டும் என்றார்.