பபாசியின் 49-வது சென்னை புத்தகக் காட்சியை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜன.8) தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின (பபாசி) தலைவர் ஆர்.எஸ்.சண்முகம், செயலர் எஸ்.வயிரவன் ஆகியோர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பபாசி சார்பில் 49-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ விளையாட்டு மைதானத்தில் ஜன 8-ம் தேதி (வியாழன்) முதல் ஜன.21 வரை நடைபெற உள்ளது.
இந்த புத்தக காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து கலைஞர்கருணாநிதி பொற்கிழி விருதுகளை வழங்குகிறார். இவ்விழாவில் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
புத்தகக் காட்சி தினமும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். தமிழுக்காக 428 அரங்குகள், ஆங்கில அரங்குகள் 256, பொது அரங்குகள் 24 உள்பட மொத்தம் 1,000 அரங்குகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படும்.
ஜன.19-ம் தேதி நடைபெறும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பபாசி விருதுகளை வழங்குகிறார். ஜன.21-ம் தேதி நடைபெறும் நிறைவுநாள் விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் கலந்து கொண்டு பதிப்புத் துறையில் 25 ஆண்டுகள் சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்குகிறார்.
வாசகர்களை அதிக எண்ணிக்கையில் புத்தகக் காட்சிக்கு வரவைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த ஆண்டு புத்தகக்காட்சிக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது. புத்தகக் காட்சி வருகை தரும் வாசகர்கள் நுழைவாயிலில் பெயரை பதிவு செய்தால் போதும். அஞ்சல் துறை சார்பில் இரண்டு அரங்குகள் அமைக்கப்படும்.