தற்போதைய அரசாங்கம் ஏதேனும் நல்ல விடயங்கள் நடந்தால் அதனைத் தனது கணக்கில் சேர்த்துக்கொள்வதாகவும், தவறுகள் மற்றும் குறைபாடுகள் ஏற்படும்போது அதனை அரச அதிகாரிகள் மீது சுமத்திவிட்டு அமைதியாக இருப்பதாகவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர குற்றம் சாட்டியுள்ளார்.

வெள்ளிக்கிழமை (02) பத்தரமுல்லயில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

6ஆம் தர ஆங்கில மொழிப் பாடக் கையேட்டில் (Module) ஏற்பட்ட பாரிய தவறுகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், இந்த விவகாரத்திற்கு கல்வி அமைச்சரே முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தவறுகள் வெளிச்சத்திற்கு வந்தவுடன் அதிகாரிகளைத் தற்காலிகமாகப் பதவி விலகுமாறு கோருவதும், விசாரணைகளை சி.ஐ.டி வசம் ஒப்படைப்பதும் அரசாங்கம் தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் செயலாகும் எனக் குறிப்பிட்ட அவர், வினாத்தாள் ஒன்றைக் கூட சரியாக அச்சிடத் தெரியாத ஒரு அரசாங்கம் எதற்கு என முந்தைய காலங்களில் கேள்வி எழுப்பியவர்கள், இன்று இவ்வளவு பெரிய தவறுக்கு கல்வி அமைச்சரை ஏன் பாதுகாக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

பொருளாதார நிலை குறித்துப் பேசிய அவர், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், புத்தாண்டின் ஆரம்பத்திலேயே எரிவாயு விலையை உயர்த்தி மக்களுக்குப் பாரிய சுமையை அளித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன், கல்கமுவ பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் தொடர்பில் சட்டத்தை நிலைநாட்டச் சென்ற புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியக அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர்களின் தொலைபேசி அழைப்புகளுக்காகச் சட்டம் வளைக்கப்படுவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அனைவருக்கும் சமமான சட்டம் என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி பொலிஸாரையும் அரச அதிகாரிகளையும் சுதந்திரமாகச் செயற்பட விடாமல் தடுப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

அரசாங்கத்தின் இவ்வாறான தவறுகளைச் சுட்டிக்காட்டும் ஊடகங்களை மௌனிக்கச் செய்ய முயற்சிகள் எடுக்கப்படுவதாகத் தெரிவித்த வக்கும்புர, ஊடகங்களை மிரட்டுவதை விடுத்து அரசாங்கம் தனது தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் மற்றும் நிறைவேற்று அதிகாரம் தங்களிடம் இருப்பதால் எதனையும் செய்யலாம் என அரசாங்கம் கருதக்கூடாது எனவும், தற்போதைய ஆட்சியாளர்களின் வீழ்ச்சி ஏற்கனவே தொடங்கிவிட்டது என்றார்.