அல்லைப்பிட்டியில் பொலிசரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொழும்பில் உள்ள குற்ற புலனாய்வு பிரிவினருக்கு மாற்றுமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி அதிகாலை வேளை பயணித்த ஹயஸ் ரக வாகனத்தை பொலிஸார் வழிமறித்த போது பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் வாகன சாரதியான 17 வயது சிறுவன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளான்.
குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (12) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
அதன்போது , உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் சார்பாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் 06க்கும் மேற்பட்டோர் மன்றில் முன்னியாகி, சிறுவனின் கொலை தொடர்பில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் திருப்தி இல்லை என மன்றில் சுட்டிக்காட்டி , வழக்கு விசாரணைகளை கொழும்பில் உள்ள குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்க வேண்டும் என மன்றில் சமர்ப்பணங்களை முன் வைத்தனர்.
அதற்கு பொலிஸ் தரப்பில் கடுமையான ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டன. அதனால் கடுமையான வாத பிரதிவாதங்களை அடுத்து விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு மாற்றுமாறு மன்று உத்தரவிட்டது.
அதேவேளை இன்றைய வழக்கு விசாரணைகளின் போது , பொலிஸ் உயர் அதிகாரிகள் , பொலிஸ் திணைக்கள சட்டத்தரணிகள் , என 20க்கும் மேற்பட்டோர் நீதிமன்றுக்கு சமூகமளித்திருந்தனர்.
அத்துடன் இன்றைய வழக்கு விசாரணையின் போது , சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தினுள் இருந்து துப்பாக்கி ரவையின் வெற்றுக்கோது ஒன்றினை மீட்டதாக பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.
சம்பவ தினத்தன்று தடயவியல் பொலிஸாரினால் மீட்கப்படாத துப்பாக்கி ரவையின் வெற்றுக்கோது தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவது சந்தேகத்திற்கு உரியது என பாதிக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து மன்றில் முன்னியான சட்டத்தரணிகள் கடும் ஆட்சேபனையை மன்றில் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சம்பவம் நடைபெற்று ஒரு மாத கால பகுதி கடந்தும் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அல்லைப்பிட்டி சிறுவன் உயிரிழப்பு: விசாரணை சி.ஐ.டிக்கு மாற்ற நீதிமன்ற உத்தரவு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space