பொரலஸ்கமுவ - நிர்மல மாவத்தை பகுதியில், ஹேஷ் மற்றும் குஷ் ரக போதைப்பொருட்களுடன் யுவதி ஒருவர்நேற்று வியாழக்கிழமை (5)  கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே, இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யுவதியிடமிருந்து, 17 கிலோகிராம் ஹேஷ் மற்றும் 400 கிராம் குஷ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபரான யுவதி பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் ஆவார்.

அதேநேரம், சந்தேக நபரான யுவதி 04 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட ஒருவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில், வெளிநாட்டிலிருந்து விமானம் மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட குஷ் ரக போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் பணியக விமான நிலையப் பிரிவினரால், நேற்று வியாழக்கிழமை (5) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து,  02 கிலோகிராம் 116 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் 26, 36 மற்றும் 43 வயதுடையவர்கள் எனவும், மானிப்பாய் மற்றும் மன்னார் பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.