கண்டி - தலாத்துஓயா, மயிலபிட்டிய பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு வயதும் இரண்டு மாதங்களும் உடைய பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (03)  புதன்கிழமை பிற்பகல் தென்னகும்பர - ராகல வீதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

உயிரிழந்த குழந்தை உனுவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு வயதும் இரண்டு மாதமும் உடைய பெண் குழந்தைவராவார்.

தென்னகும்பர நோக்கிச் சென்ற கார்  ஒன்று, தனக்கு முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர்த்திசையில் வந்த முச்சக்கரவண்டி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த சமயத்தில், உயிரிழந்த அந்தக் குழந்தை முச்சக்கரவண்டியின்  பின் ஆசனத்தில் பயணித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

அவர்கள் உடனடியாக ஹங்குரன்கெத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு,  தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த குழந்தையின் தாயும், முச்சக்கரவண்டியைச் செலுத்திய தந்தையும் தற்போது வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துடன் தொடர்புடைய கார் சாரதி  தலாத்துஓயா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இச்சம்பவம் குறித்து தலாத்துஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்தனர்.