நீர்கொழும்பு - மினுவாங்கொடை வீதியின் போலவலன பகுதியில், கன்டெய்னர் லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த கும்பல் லொறிக்குத் தீவைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை 29 ஆம் திகதி இரவு 11:10 மணியளவில், போலவலன பகுதியில் வீதியைக் கடக்க முயன்ற கொள்கலன் லொறியுடன், அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் தாகொன்ன, நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 20 வயதுடைய இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தினைத் தொடர்ந்து கன்டெய்னர் லொறியின் சாரதியைக் கட்டானா பொலிஸார் கைது செய்தனர். எனினும், சம்பவ இடத்தில் திரண்ட கட்டுப்பாடற்ற கும்பல் ஒன்று லொறிக்குத் தீவைத்ததில் அது கடுமையாகச் சேதமடைந்தது.
தீவைப்புச் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளை அடுத்து, நேற்று (30) வியாழக்கிழமை மாலை 20, 25 மற்றும் 26 வயதுடைய மூன்று சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் தாகொன்ன மற்றும் கிம்புலாபிட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
சம்பவ இடத்தில் கைவிடப்பட்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சிரிரிவி காணொளிகள் மற்றும் ஆதாரங்களின் உதவியுடன், வாகனத்தை எரித்த சம்பவத்தில் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்யக் கடானா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.