ஸ்ரீலங்கன் விமானச் சேவையின் முன்னாள் முதன்மை நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பான மேலதிக நீதவான் விசாரணைகளைக் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மரணம் குறித்த விசாரணை இன்று (05) வெள்ளிக்கிழமை கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இன்றைய வழக்கு விசாரணையின் போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் உயிரிழந்த கபில சந்திரசேனவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கொன்றில் அவருக்காக முன்னிலையாகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்சி அர்சகுலரத்ன மற்றும் அவரது உதவிச் சட்டத்தரணி உதர முஹந்திரம்கே ஆகியோரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் சாட்சியமும் நீதிமன்றத்தினால் பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, சாட்சியங்களைப் பதிவு செய்யும் மேலதிக விசாரணைகளை இந்த மாதம் 09 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதவான் உத்தரவிட்டார்.