1941ஆம் ஆண்டு முதல் நீண்டகால வரலாற்றைக் கொண்ட வெள்ளவத்தை கின்றோஸ் (Kinross) நீச்சல் மற்றும் உயிர் பாதுகாப்புச் சங்கம் தற்போது பாரிய நிதி நெருக்கடியையும், இடவசதி தொடர்பான சிக்கலையும் எதிர்நோக்கியுள்ளதாக அதன் முன்னாள் தலைவர் பி.ஆர்.ஏ. பெர்னாண்டோ தெரிவித்தார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர் பின்வரும் விடயங்களைக் குறிப்பிட்டார்:

நிலுவைப்பணம் தொடர்பான சர்ச்சை

ரயில் திணைக்களத்திற்குச் சொந்தமான நிலத்திலேயே 1941 முதல் இச்சங்கம் இயங்கி வருகின்றது. இதற்கான வாடகை மற்றும் வரிகளை சங்கம் முறையாகச் செலுத்தி வந்துள்ளது. எனினும், கடந்த 2024 ஜனவரி மாதம் ரயில் திணைக்களத்திடமிருந்து ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அதில் 3.075 மில்லியன் ரூபாய் நிலுவையாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முறையற்ற கோரிக்கை

சங்கத்தினால் செலுத்தப்பட வேண்டிய அனைத்துக் கொடுப்பனவுகளும் ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டதாக ரயில்வே திணைக்களமே முன்னதாக கடிதம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. இவ்வாறான பின்னணியில், திடீரென இவ்வளவு பெரிய தொகையை நிலுவையாகக் கோருவது சங்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையை உருவாக்கியுள்ளது.

இலாப நோக்கற்ற சேவை

கின்ரோஸ் சங்கம் ஒரு இலாப ஈட்டும் நிறுவனமல்ல. இது ஒரு பொதுச் சேவை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு நிறுவனமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகையைச் செலுத்தும் நிதி வசதி இச்சங்கத்திடம் இல்லை.

அரசியல் பொறிமுறை

கடந்த அரசாங்கத்தின் காலத்தில், அப்போதைய அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் இது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர் இது தொடர்பாக அமைச்சரவைப் பத்திரம் (Cabinet Paper) ஒன்றைத் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி, முறையான தீர்வினை வழங்காமல் பொறுப்பில் இருந்து விலகிக்கொண்டார் என முன்னாள் தலைவர் குற்றம் சாட்டினார்.

சங்கத்தின் கோரிக்கை

நீண்டகாலமாகப் பல நீச்சல் வீரர்களையும், உயிர் பாதுகாப்புப் பணியாளர்களையும் உருவாக்கி வரும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சங்கத்தைப் பாதுகாப்பதற்கு தற்போதைய அதிகாரிகள் மற்றும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்க உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.