கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்யும் வகையில் அவர்களுக்கான படிவங்களை இன்று முதல் வழங்கப்படுவதாக நெல் சந்தைப்படுத்தல் சபையினுடைய பிராந்திய( பதில்) முகாமையாளர் தவராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று (13.07.2026) முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக சிறுபோக நெல் கொள்வனவு முன்னெடுக்கப்படும் என அதன் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக, தற்சமயம் அதிக நெல் அறுவடை இடம்பெறும் பிரதேசங்களை அண்மித்து நெற் களஞ்சியசாலைகளைத் திறந்து நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதற்கமைய, வடக்கு மாகாணத்தில் , தற்போது அதிகளவில் நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், அந்தப் பிரதேசங்களில் நெல் கொள்வனவு மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நெல் சந்தைப்படுத்தல் சபையினால் ஒரு கிலோ நாட்டு நெல் 120 ரூபாவிற்கும், ஒரு கிலோ சம்பா நெல் 130 ரூபாவிற்கும், ஒரு கிலோ கீரி சம்பா நெல் 140 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளன.
அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தினுடைய நெல் கொள்வனவு தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் மாவட்டத்தில் ஒவ்வொரு விவசாயிகளிடம் இருந்தும் தலா 2500 கிலோ நெல்லை கொள்ளுதல் செய்யும் வகையில் இன்றைய தினம் முதல் அதற்கான படிவங்களை வழங்கி வருவதாகவும் மாவட்டத்தில் இரண்டாயிரம் மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.