கிவுல் ஓயா திட்டம்: வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுவில் கலந்துரையாட தீர்மானம்
Ad Space
Ad Space
Ad Space
கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் பாராளுமன்ற குழுக்கள் ஊடாக கலந்துரையாடி இணக்கப்பாடொன்றை எட்டியதன் பின்னர் அவ்விடயம் குறித்து வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் சார்ந்த நீரியல் வளங்களுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து ஆராயும் கூட்டம் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கே.டி.லால் காந்த தலைமையில் வியாழக்கிழமை (12) வவுனியாவில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பி.சத்தியலிங்கம், கடந்த அரசாங்கம் மடு சரணாலயத்தை, மடு தேசிய பூங்காவாக மாற்றியமைத்ததால் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து கேள்வியெழுப்பியுள்ளார்.
மடு தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்ட பகுதியில் மக்கள் வசிக்கின்ற நிலையில் அங்கு காட்டு யானைகளின் தொல்லை காணப்படுகிறது.காட்டு பாதை வழியாக பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதால் அவர்களின் பாதுகாப்பு குறித்து அச்சநிலை காணப்படுகிறது.
மாந்தை மேற்கு பிரதேச சபையின் அனுமதியுடன் இந்த பாதையை துப்பரவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது வனவளத்துறை திணைக்களம் அதற்கு இடையூறாக செயற்படுகிறது. அரச நிறுவனத்தின் ஒரு தீர்மானத்துக்கு, பிறிதொரு திணைக்களம் தடையேற்படுத்துகிறது.இதனால் மக்கள் தான் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பி. சத்தியலிங்கம் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் வவுனியா –மடு வரையான பாதையில் 22 கிலோமீற்றர் பாதையை செப்பனிடுவதற்கான பணிகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபை புதன்கிழமை (11) முன்னெடுத்த போது வனவளத்துறை திணைக்களம் அதற்கு இடையூறு விளைவித்துள்ளது.இதனால் அந்த பணிகளும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.
சரணாலயமாக இருந்த ஒருபகுதியை தேசிய பூங்காவாக அறிவித்ததால் நடைமுறையில் இவ்வாறான பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன.மக்கள் வாழும் பகுதிகளில் கூட எவ்வித அபிவிருத்திகளையும் முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுகிறது. அனைத்துக்கும் வனவளத்துறை திணைக்களத்திடம் அனுமதி கோர வேண்டிய நிலை காணப்படுகிறது என்றும் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்கு பதிலளித்த விவசாயம், காணி மற்றும் நீர்பாசனத்துறை அமைச்சர் லால் காந்த, இந்த விடயங்கள் ஏற்றுக்கொள்ள கூடியதே, மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் . ஆகவே நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தற்காலிக தீர்வையேனும் முன்வையுங்கள் என்று வனவளத்துறை திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.இதற்கு வனவளத்துறை திணைக்கள அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பி. சத்தியலிங்கம், இவ்வாறான தற்காலிக தீர்வுகள் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வாக எப்போதும் அமையாது. கொள்கை ரீதியில் தீர்மானங்களை எடுங்கள் அதுவே நிலையானதாக இருக்கும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த கூட்டத்தில் கிவுல் ஓயா திட்டம் மற்றும் அதனுடனான சிக்கல்கள் குறித்து கலந்துரையாடப்படவில்லை. நேரம் போதாத காரணத்தால் இந்த விடயம் குறித்து அவதானம் செலுத்தப்படவில்லை என்று குறிப்பிடப்படுகிறது. பாராளுமன்ற குழுக்கள் ஊடாக கிவுல்ஓயா திட்டம் குறித்து ஒரு இணக்கப்பாட்டை எட்டி அதனை அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Ad Space
Ad Space
Ad Space