பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்டு, நீதிமன்ற விசாரணைகள் நிறைவடைந்த சுமார் 200 கிலோ கிராமுக்கு அண்ணளவான போதைப்பொருள் வெள்ளிக்கிழமை (13) காலை வனாத்தவில்லு பகுதியில் அமைந்துள்ள விசேட தகன உலையில் வைத்து அழிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணைகள் யாவும் நிறைவடைந்ததை அடுத்து, நீதிமன்ற உத்தரவிற்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.  இதன்போது 40 கிலோ 533 கிராம் ஹெரோயின், 132 கிலோ 79 கிராம் கெத்தின்  போதைப்பொருள், 55 கிராம் கொக்கெய்ன் மற்றும் 3,482 போதை மாத்திரைகள்  என்பன இவ்வாறு தகனம் செய்யப்படவுள்ளன.

இந்த பாரியளவான போதைப்பொருள் இன்று (13) காலை 6.00 மணியளவில் கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் புத்தளம், வனாத்தவில்லு - லொக்டோவத்த பகுதியில் அமைந்துள்ள விசேட தகன உலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. காலை 9.00 மணியளவில் குறித்த இடத்தில் போதைப்பொருட்களை அழிப்பதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் குறித்த போதைப்பொருள் தொகுதியைப் பொறுப்பேற்கும் நிகழ்வை அறிக்கையிட ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, வනාத்தவில்லு லැக்டோவத்த பகுதியில் போதைப்பொருள் அழிக்கப்படும் நிகழ்வை அறிக்கையிடுவதற்காக அந்தந்த பிரதேச ஊடகவியலாளர்களை ஈடுபடுத்துவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.