நவகமுவ பொலிஸ் பிரிவின் கொரத்தொட்ட பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த மூன்று பேர் மீது ஒரு குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, இருவர் ஹோமகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று வியாழக்கிழமை  (01) இரவு 9.30 மணி முதல் 10 மணி வரை துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், காயமடைந்தவர்கள் அதுருகிரிய ஒருவல மாவட்ட  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹோமகம அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பலாந்தோட்டை, வாடியகொட மற்றும் தெமட்டகொடை கெவலமுல்ல ஆகிய இடங்களைச் சேர்ந்த இருவரே துப்பாக்கிச் சூட்டுக் காயத்திற்குள்ளாகியுள்ளனர்.


துப்பாக்கிச் சூட்டின் போது, ஒருவர் நான்கு தோட்டாக்களால் தாக்கப்பட்டதாகவும், மற்றொருவர் ஒரு தோட்டாவால் தாக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் நடந்த இடத்தில் 9 மில்லி மீற்றர் அளவிலான 15 தோட்டா உறைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக நுகேகொட பொலிஸ் பிரிவின் குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள், ஹோமாகம பொலிஸ் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நவகமுவ பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.