எதிர்க்கட்சி உறுப்பினர்களை சபை முதல்வர் மரியாதை இன்றி பேசுவாராக இருந்தால் நாங்களும் சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை கௌரவ என்று விளிப்பதா? இல்லையா? என எங்களுக்கு சிந்திக்க நேரிடும் என்று ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) எதிர்க்கட்சி உறுப்பினர் சாமர சம்பத் தொடர்பான சர்ச்சையின் போது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்கவினால் தெரிவிக்கப்பட்ட கருத்தொன்று தொடர்பில், தனது கருத்தை முன்வைக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது மரிக்கார் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,

எதிர்க்கட்சி உறுப்பினர்களை சபை முதல்வர் நீ என்று ஒருமையில் பேசினார். இதனை சபாநாயகர் நியாயப்படுத்தினார். அவர் அவ்வாறு நடந்துகொள்வாராக இருந்தால் நாங்கள் இனி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர், கௌரவ அமைச்சர் என்று கூறுவதா? மற்றும் சபாநாயகரை கௌரவ என்று கூறுவதா? என்று எமக்கு சிந்திக்க நேரிடும். சபையில் பொருத்தம் இல்லாத வசனங்களை கூறியிருந்தால் அதனை நீக்குவதற்கு சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது. சபை முதல்வர் சபையில் இவ்வாறு கதைத்துவிட்டு உடனடியாக தற்போது சபையில் இருந்து வெளியேறியுள்ளார் என்று தெரிவித்தார்.