கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சலேவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள நிலையில், அதிகாரிகள் அவர் உயிரிழக்கும் வரை காத்திருக்கின்றனர். சுரேஷ் சலே எந்தச் சூழ்நிலையிலும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என சுரேஷ் சலேவின் மனைவி விசனம் வெளியிட்டுள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சனிக்கிழமை (27) சுரேஷ் சலேவை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

சுரேஷ் சலேவுக்கு இன்று காலை திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு சென்றார்கள்.

அங்கு மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டார்கள். அந்த பரிசோதனைகளின் பின்னர் அவருக்கு ஒரு குறிப்பிட்ட உடல்நலக் குறைபாடு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் தற்போது அவர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மருத்துவர்கள் கூறுவதாவது, மீண்டும் மீண்டும் நெஞ்சுவலி ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாகும். அதற்காக தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

அமைச்சர்கள் அல்லது வெளியில் இருப்பவர்கள் என்ன கூறினாலும், இங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களே உண்மையான நிலையை அறிந்திருக்கிறார்கள். சுரேஷ் சலே தற்போது நல்ல நிலையில் இல்லை. நாளுக்கு நாள் பல்வேறு உடல்நலச் சிக்கல்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.