தடம் புரண்ட “சாகரிகா” ரயில் திங்கட்கிழமை (27) முதல் மீண்டும் தனது சேவைகளை ஆரம்பிக்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ரயில் இன்று முதல் வழமையான கால அட்டவணைக்கு அமைவாக இயங்கும் என போக்குவரத்து அத்தியட்சகர் அசாங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (24) பெலியத்தையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த “சாகரிகா” ரயில், வத்தேகம ரயில் நிலையத்தில் தடம் புரண்டது. ரயிலின் 13 பெட்டிகளில் 11 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகின.
விபத்து இடம்பெற்ற போது ரயிலில் பணியில் இருந்த நான்கு ஊழியர்களான ரயில் ஓட்டுநர், உதவி ஓட்டுநர், பாதுகாவலர் மற்றும் உதவிப் பாதுகாவலர் ஆகியோர் விசாரணைகள் முடியும் வரை பணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.
தொழில்நுட்பக் கோளாறு உள்ள ரயில்களை சேவையில் நிறுத்தவும், ரயில் சேவையின் போது வேகக் கட்டுப்பாடுகளைக் கண்டிப்பாகப் பின்பற்றவும் ரயில் ஓட்டுநர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக அதன் இணைப்பாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.