மட்டக்குளியில் நபர் ஒருவரைக் கடத்திச் சென்று, கழுத்தை நெரித்து நீரில் மூழ்கடித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்களை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
ஏப்ரல் 22-ம் திகதி மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து நபர் ஒருவர் மர்மமான முறையில் கடத்திச் செல்லப்பட்டார்.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, கடத்தப்பட்டவர் கழுத்தை நெரித்து துன்புறுத்தப்பட்டதுடன், பின்னர் நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நேற்றுமுன் தினம் சனிக்கிழமை (25) மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் மூலம் இந்த ஐந்து சந்தேக நபர்களும் கைது செ்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொழும்பு-15 மற்றும் பமுணுகம பகுதிகளைச் சேர்ந்த 23 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதோடு, இக்கொலைக்கான பின்னணி மற்றும் தனிப்பட்ட பகை ஏதும் உள்ளதா என்பது குறித்து மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.