தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தான தியாகி பொன். சிவகுமாரனின் நினைவுநாளைக் கட்சிப் பேதங்கள் கடந்து தொடர்ந்து நினைவுகூர வேண்டும். இதன் மூலமாகத் தான் எதிர்காலச் சந்ததிக்குத் தமிழின விடுதலை உணர்வை, வரலாறுகளை ஊட்டிச் செல்ல முடியுமென மூத்த தமிழ் அரசியல் தலைவரும், வல்வெட்டித்துறை நகர பிதாவுமான எம்.கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்மக்களின் உரிமைப் போராட்டத்தில் அகிம்சை, ஆயுத வழி, ஜனநாயக வழியென நீண்ட பங்களிப்பைக் கொண்டவர் எம்.கே.சிவாஜிலிங்கம். நோயுற்ற நிலையிலிருக்கும் அவர் சிவகுமாரனின் 52 ஆவது ஆண்டு நினைவு நாளான வெள்ளிக்கிழமை (05.06.2026) ஊடகங்களுக்கு நினைவுப் பகிர்வொன்றை வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிவகுமாரன் அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக குறிப்பாக தரப்படுத்தலுக்கு எதிரான போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தியவர். நாம் பாடசாலை மாணவர்களாக இருந்தபோது அவரின் தலைமையில் பல போராட்டங்களில் பங்கேற்றிருந்தோம். மருதனார்மடத்திலிருந்து பாதயாத்திரையாக யாழ்ப்பாணம் நகரம் வரை சென்றிருக்கிறோம்.
அவருடைய இறுதி ஊர்வலத்தின் போது பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். முதன்முதலாக யாழ்ப்பாணத்தில் பெண்கள் மயானத்துக்கு வந்ததும் இதன்போது தான். பின்னர், சிவகுமாரனுக்குச் சிலை வைக்கப்பட்டது. அந்தச் சிலையைத் தொடர்ந்து வைக்கப்பட்ட நான்கு சிலைகள் உடைக்கப்பட்டன. விழவிழ எழுவோம் என்பதுபோலச் சிலையாக எழுந்து இன்றும் நிமிர்ந்து நிற்கிறான் சிவகுமாரன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.