நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவினர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் எங்கு உள்ளார்கள்? என்பதை  கைதிகளின் உறவினர்கள் சிலர் இன்னும்  தேடி வருகின்றனர்.

வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளுடைய பெயர் பட்டியல் சிறைச்சாலைக்கு வெளியே வீதியோரத்தில் உள்ள கன்டெய்னர் பெட்டி ஒன்றிலும் அங்கு இன்னும் சில இடங்களிலும்  ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. பொலிஸாரும்  கடந்த இரண்டு தினங்களாக  சிறைச்சாலைக்கு முன்பாக இருந்து அந்த விபரங்களை உறவினர்களுக்கு அறிவித்தனர்.

இந்நிலையில் இன்ற  (09) வியாழக்கிழமை கைதிகளின்  உறவினர்கள்  சிலர் அங்கு வந்து பெயர் பட்டியலை வாசிப்பதை காணக்கூடியதாக உள்ளது.   நீர்கொழும்பு சிறைச்சாலையில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுடைய விபரங்களை தாம் இன்னும் அறியவில்லை என அங்கு வந்த கைதிகளின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் மற்றும் பதற்ற நிலைமைகளைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.