நெல் உலரவைத்தல் மற்றும் களஞ்சியப்படுத்தல் உள்ளிட்ட பல வசதிகளை மேம்படுத்துவதற்காக கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்தின் ஊடாக இவ்வருடத்தில் 100 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற அமைச்சு சார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நெல் உலரவைத்தல் மற்றும் களஞ்சியப்படுத்தல் போன்றவற்றுக்கு தேவையான இயந்திரங்கள் வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் நிலை நிறுத்தப்படவுள்ளது. அத்துடன், கூட்டுறவுச் சங்கங்களுக்கு நெல் உலர வைக்கும் இயந்திரங்களை வழங்குவதற்காக 500 மில்லியன் ரூபா பெறுமதியான திட்டமும், உற்பத்தி கூட்டுறவுச் சங்கங்களுக்கான உற்பத்தி மற்றும் பொதியிடல் இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்காக 100 மில்லியன் ரூபா பெறுமதியான திட்டமும் இவ்வருடத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
நெல்லை அரிசியாக மாற்றும் செயல்முறையிலும், உருளைக்கிழங்கு கொள்வனவிலும் கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனம் தற்போது தலையிட்டுள்ளதுடன், அதற்கமைய உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 220 ரூபா வீதம் கொள்வனவு செய்யப்பட்டு, லங்கா சதொச நிறுவனத்தினூடாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிகளுக்குப் மாற்றீடாகக் கடந்த ஏப்ரல் மாதத்தில் 120,000 மெட்ரிக் டொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் தேவை ஏற்பட்டால் மட்டுமே மீண்டும் அரிசி இறக்குமதி செய்வது குறித்து பரிசீலிக்கப்படும்.
இதேவேளை, சில கூட்டுறவுச் சங்கங்களில் இடம் பெற்று வரும் மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து, இவ்வாறான மோசடிகளுடன் தொடர்புடைய நபர்கள் எவ்வித தண்டனையுமின்றி, மீண்டும் அச்சங்கங்களின் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு நிர்வாகப் பிரச்சினைகள், சட்டக் குறைபாடுகள் மற்றும் ஏனைய பலவீனங்களை விரைவாக நிவர்த்தி செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், மகாபொல நிதியுதவி பெற்ற முன்னாள் மாணவர்களை ஒன்றிணைத்து புதிய சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து முன்னாள் மாணவர்களையும் இதில் இணைந்து எதிர்கால மாணவர் சமூகத்தின் முன்னேற்றத்திற்காகப் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றார்.