யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் குடியிருப்புகளுக்குள் புகுந்து செல்லப்பிராணிகளை வேட்டையாடி வந்த அரிய வகை சருகு புலி ஒன்று கிராம மக்களால் பிடிக்கப்பட்டு, வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அழிந்துவரும் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய ஓர் உயிரினமாக கருதப்படும் இந்தச் சருகு புலி, அண்மைக்காலமாக சாவகச்சேரி - நுணாவில் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து, கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளை வேட்டையாடி வந்துள்ளது.

இந்நிலையிலேயே, நேற்று (08) திங்கட்கிழமை இரவு கிராம மக்கள் ஒன்றிணைந்து இந்தச் சருகு புலியைப் பிடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது. எனினும், கிளிநொச்சியில் இருந்து வருகை தந்த அதிகாரிகள், மயக்கமருந்து மற்றும் கூண்டு உள்ளிட்ட அத்தியாவசிய உபகரணங்கள் இன்றி வந்ததால், சருகு புலியை மறுநாள் வந்து கொண்டு செல்வதாகக் கூறியுள்ளனர்.

இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே சில மணிநேரம் பதற்றமான சூழல் நிலவியது. பின்னர், மக்களின் எதிர்ப்பையடுத்து மற்றொரு வனஜீவராசிகள் திணைக்கள வாகனம் மற்றும் கூண்டு வரவழைக்கப்பட்டு, சருகு புலி பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.