2026 ஆம் ஆண்டின் முதல் கோடை மழை எதிர்வரும்- 09 ஆம் திகதி கிழக்கு மாகாணத்துக்கும், 10 ஆம் திகதி வடக்கு மாகாணத்துக்கும் கிடைக்கத் தொடங்கும். அதேவேளை எதிர்வரும்- 10 ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவர் பேராசிரியர்.நாகமுத்து பிரதீபராஜா வெள்ளிக்கிழமை  (06.03.2026) தெரிவித்துள்ளார். இந்த மழை இடி மின்னலுடன் இணைந்த மழை என்பதனால் இடிமின்னல் தொடர்பில் மக்கள் மிக அவதானமாகவிருப்பது அவசியமெனவும் அவர் முன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த மழைவீழ்ச்சி இடி மின்னலுடன் இணைந்த மழை என்பதனால் இடிமின்னல் தொடர்பில் மக்கள் மிக அவதானமாகவிருப்பது அவசியம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவிலான இடிமின்னல் இறப்புக்கள் முதலாவது இடைப் பருவ காலத்திலேயே (மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள்) பதிவாகியுள்ளது.

வடகீழ்ப் பருவம் முழுமையாக விடை பெற்றுள்ள நிலையில் தற்போது முதலாவது இடைப் பருவம் தொடங்கியுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முழுமையான கோடை காலம் தொடங்கியுள்ளது. கோடை காலம் என்பது வெப்பச் சலன மழைக்கான காலம் எனப்படுகிறது. இதையே கோடை மழை எனவும் அழைப்பர். பகலில் அதிகளவிலான வெப்ப நிலையும், இரவில் பனியுடன் கூடிய குளிரும் நிலவும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.