வடக்கு மாகாணத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களிலும் நகரப் பகுதிகளிலும் அமைந்துள்ள பொதுச் சுகாதார வசதிகளை, உள்ளூராட்சி மன்றங்கள் தினசரி கண்காணித்து முறையாகப் பராமரிக்க வேண்டும் என வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜே.விவேகானந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வடக்கு மாகாணத்துக்கு குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்துக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள், இங்குள்ள பொதுச் சுகாதார வசதிகளில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் எமது கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்தில் நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுகாதார வசதி வளாகத்தை (மலசலகூடம்) பொதுமக்களின் பாவனைக்காக மிக விரைவில் திறந்துவிடுவதற்கான துரித முயற்சிகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இத்தகைய மாபெரும் உள்கட்டமைப்புகள் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதற்காக, உரிய தரப்பினருடன் இணைந்து தேவையான ஒருங்கிணைப்புச் செயற்பாடுகளை வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.

யாழ்ப்பாணத்தின் சுற்றுலாத்துறையில் பண்ணைப் பொழுதுபோக்குப் பூங்காவும், பருத்தித்துறையும் மிக முக்கிய இடங்களை வகிக்கின்றன. பண்ணைப் பகுதிக்குத் தினமும் மாலை வேளைகளில் ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்களும் குடும்பங்களும் வருகை தருவதுடன், இலங்கையின் வடக்கு எல்லையான பருத்தித்துறைக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் பெருமளவில் வருகை தருகின்றனர்.

இந்தச் சுற்றுலாப்பயணிகளின் வருகையைத் தக்கவைப்பதற்கும், அவர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்குவதற்கும் தூய்மையான சுகாதார வசதிகள் மிக அவசியமானவை என்பதை உணர்ந்து, இந்த இரு வளாகங்களிலும் உள்ள சுகாதார வசதிகளை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கச் சுற்றுலாப் பணியகம் துரித நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

உள்ளூராட்சி மன்றங்கள் தங்களின் எல்லைக்குட்பட்ட சுற்றுலாத் தலங்களின் தூய்மையைப் பேணுவதை உறுதிசெய்ய வேண்டும். அதேவேளை, தேவையான இடங்களில் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை மேலும் நவீனப்படுத்தவும் மேம்படுத்தவும் வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் தனது முழுமையான ஆதரவையும் நிதி உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளது.

இனிவரும் காலங்களில், சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் தங்குதடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய, அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயலாற்ற முன்வர வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.