காலி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ள விகாரைகளின் காணிக்கைப் பெட்டிகள் மற்றும் தேரர்களின் தங்குமிடங்களை இலக்கு வைத்து தொடர்ச்சியாகக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் காலி துறைமுகக் பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளார்.

பொத்தல பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கராப்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து மகுலுவ பகுதியில் உள்ள விகாரை ஒன்றிலிருந்து திருடப்பட்டதாகக் கூறப்படும் பெருமளவு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயங்களுடன் 2,740 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

4,700 சீன யுவான் மற்றும் 1,112 அமெரிக்க டொலர் என்பனவும் உள்நாட்டுப் பணம் 24,120 ரூபாயும் காணப்பட்டதாக பொலிஸாரட தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் காலி, யக்கலமுல்ல, இமதுவ மற்றும் காலி துறைமுக பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பல விகாரைகளுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, காணிக்கைப் பெட்டிகள் மற்றும் தேரர்களின் அறைகளில் இருந்த பணத்தைக் கொள்ளையடித்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (11) காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், காலி துறைமுக பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.