தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியின் ஒருங்கிணைப்புச் செயலாளர்களை இலக்கு வைத்து ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என அந்த அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தொழில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியின் ஒருங்கிணைப்புச் செயலாளர் விரட்டியடிக்கப்பட்ட விதம் எனும் தலைப்பின் கீழ் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் காணொளிகள், அமைச்சரினதும் அவரது ஊழியர்களினதும் கௌரவத்திற்குப் பாரிய களங்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

குறித்த காணொளிகளில் காட்டப்படும் நபர்களோ அல்லது மக்களின் எதிர்ப்புக்கு உள்ளானவர்களோ அமைச்சரின் உத்தியோகபூர்வ ஒருங்கிணைப்புச் செயலாளர்களான எம்.ஆர்.எம்.டபிள்யூ. டயஸ் அல்லது ரசிந்து யசோத் மாரகல ஆகியோர் அல்ல என்பதை அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

முறையான உண்மைத் தன்மையைக் கண்டறியாமல் இவ்வாறான போலிச் செய்திகளைப் பரப்புவது பொறுப்பற்ற செயலாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சு, இது பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இருந்து இந்தப் போலிச் செய்திகளையும் காணொளிகளையும் நீக்குவதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், இவ்வாறான தவறான செய்திகளை வெளியிட்ட நிறுவனங்கள், தமது தவறுகளைத் திருத்திக் கொண்டு உண்மையான தகவல்களை உடனடியாகப் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் தொழில் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.