அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக, இலங்கை நிர்வாக சேவையின் அதிவிசேட தர அதிகாரியான அனுபம மங்கள விக்ரமாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் அம்பாறை மாவட்ட செயலகத்தில் உத்தியோகபூர்வமாகத் தனது பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார்.மத்துகமவைப் பிறப்பிடமாகக் கொண்ட அனுபம மங்கள விக்ரமாராச்சி, மத்துகம சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரா மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவராவார்.
நிர்வாகத் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட இவர், இதற்கு முன்னர் மோட்டார் வாகனத் திணைக்களத்தின் ஆணையாளராகத் திறம்படச் செயலாற்றியுள்ளார்.
குறிப்பாக, 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அம்பாறை மாவட்டத்தின் மகா ஓயா மற்றும் கல்முனை ஆகிய பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராகப் பணியாற்றிய அனுபவமும் உண்டு.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய சிந்தக அபேவர்த்தன இடமாற்றம் பெற்றுச் செல்வதைத் தொடர்ந்து, அவருக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் பிரியாவிடை நிகழ்வு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் அவருக்குத் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். மாவட்டத்தின் நிர்வாகக் கட்டமைப்பை நன்கு அறிந்த ஒரு சிரேஷ்ட அதிகாரி புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை, அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் நிர்வாகப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.





