அரசாங்கம் பதவி விலகுமாறு கோரவில்லை!

பதவி விலகுமாறு அரசாங்கம் ஒருபோதும் குறிப்பிடவில்லை. ஐந்து வருட பதவி காலத்தை சிறந்த முறையில் நிறைவு செய்து தனிப்பட்ட காரணிகளுக்காக பதவி விலகியுள்ளேன். இனி எந்த அரசியல் கட்சியுடனும் ஒன்றிணைந்து செயற்பட போவதில்லை. ஓய்வுக்காலத்தை சிறந்த முறையில் கழிக்க எதிர்பார்த்துள்ளேன். சர்வதேச விவகாரங்களில் ஆதரவளிக்குமாறு கோரப்பட்டால் அரசாங்கத்திற்கு உதவத் தயாராகவுள்ளேன் என அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

அமெரிக்காவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் மஹிந்த சமரசிங்கவின் இராஜதந்திர சேவையை மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் பாராட்டியுள்ளனர்.

அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் பதவியிலிருந்து அண்மையில் விலகிய மகிந்த சமரசிங்க, அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க வாரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் மற்றும் மல்வத்து பீடத்தின் மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை (09) நேரில் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் தூதுவர் மஹிந்த சமரசிங்க,

கடந்த மாதம் 31 ஆம் திகதி தூதுவர் பதவியில் இருந்து விலகி, நாட்டுக்கு வந்துள்ளேன்.பதவி விலகுமாறு அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு அழுத்தமும் வரவில்லை.தனிப்பட்ட காரணங்களினாலேயே சுமார் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் பதவி விலகினேன். ஐந்து ஆண்டுகாலத்தில் மூன்று ஜனாதிபதிகளின் கீழ் சேவையாற்றியுள்ளேன். சிறந்த முறையில் செயற்படுவதால் எவரும் என்னுடன் முரண்படவில்லை.

பதவிக்காலத்தில் இலங்கை-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்தவும், சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் ஒப்பந்தங்களுக்கு அமெரிக்காவின் ஆதரவைப் பெறவும்இ அமெரிக்காவால் விதிக்கப்படும் வரிகளை 10 சதவீதமாக கட்டுப்படுத்தவும், அமெரிக்காவிடமிருந்து ஒரு கடற்படைக் கப்பல் மற்றும் பல ஹெலிகொப்டர்களைப் பெற்றுக்கொடுக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன்.

27 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளேன். அரசியலில் முக்கிய பதவிகளை வகித்துள்ளேன். இனி அரசியலில் ஈடுபடும் நோக்கம் கிடையாது.இருப்பினும், சர்வதேச விவகாரங்களில் ஆதரவளிக்குமாறு கோரப்பட்டால் அரசாங்கத்திற்கு உதவத் தயாராகவுள்ளேன்.