அம்பாந்தோட்டையில் ஹுங்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாமடல பகுதியில் ஆயுதங்களுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை (17) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் ஹுங்கம – மாமடல பகுதியில் வசிக்கும் 38 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து ரி56 ரக துப்பாக்கி ஒன்று, ரி 56 ரக துப்பாக்கிக்குரிய தோட்டாக்கள் 63, போர் 12 ரக துப்பாக்கிகள் 2, போர் 12 ரக துப்பாக்கிக்குரிய தோட்டாக்கள் 25 மற்றும் ரிவோல்வர் ரக துப்பாக்கிக்குரிய தோட்டாக்கள் 34 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் லொறி ஒன்றும் கெப் வாகனமும் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து கைப்பற்றப்பட்ட லொறி மற்றம் கெப் வாகனம் மேலதிக விசாரணைகளுக்காக ஹுங்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹுங்கம பொலிஸார் மற்றும் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.