2026 கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை (G.C.E. A/L) இன்று (10) ஆரம்பமாகிறது.
இந்தப் பரீட்சை செப்டம்பர் 5ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
இம்முறை பரீட்சைக்கு பாடசாலை பரீட்சார்த்திகள் 264,496 பேரும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 107,814 பேரும் உள்ளடங்கலாக மொத்தம் 372,310 பேர் தோற்றவுள்ளனர்.
பரீட்சை ஆரம்பிப்பதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தர வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கையடக்கத் தொலைபேசிகள், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், குறிப்புகள், புளூடூத் சாதனங்கள் உள்ளிட்ட எந்தவொரு மின்னணு சாதனத்தையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு வருவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
பரீட்சை விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி, பரீட்சை மோசடிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டுகளிலும் பரீட்சை மோசடிகள் காரணமாக பல மாணவர்களின் பெறுபேறுகளை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஏதேனும் அவசர அனர்த்த நிலைமை ஏற்பட்டால், அதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க பரீட்சைகள் திணைக்களம் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





