இப்ராஹிம் விடுதலை: யாருடைய ஆட்சியில்? – மஹிந்த ஜயசிங்க கேள்வி

இப்ராஹிம் பற்றி எதிர்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். இந்த இப்ராஹிம் யாருடைய ஆட்சியில் விடுவிக்கப்பட்டார் என்பதையும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் எதிர்க்கட்சியினர் குறிப்பிட வேண்டும். 2022.05.25 ஆம் திகதி நாமல் ராஜபக்ஷவின் சித்தப்பாவான கோட்டபய ராஜபக்ஷவின் ஆட்சியில் தான் இப்ராஹிம் விடுவிக்கப்பட்டார். இவர்கள் தற்போது இதனை குறிப்பிடுவதில்லை என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (3) நடைபெற்ற அந்நிய செலவாணி சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.யுத்தத்தால் ஏற்படும் தாக்கங்களில் இருந்து மீள்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளின் பதற்ற நிலையையும் எதிர்க்கட்சியினர் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்வார்கள்.எங்காவது 10 முதல் 15 பேர் போராட்டத்தில் ஈடுபட்டால் எதிர்க்கட்சித் தலைவர் அங்குச் சென்று அமர்ந்துக் கொள்கிறார்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அங்கு சென்று தான் ஆட்சிக்கு வந்தால் இரத்தத்தால் எழுதி தீர்வு கொடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஒரு தரப்பினர் தமது போராட்டத்தை அரசியலாக்க முயற்சித்தார்கள் என்று ஜனாதிபதியிடம் குறிப்பிட்டார்கள்.

எவரேனும் நெருக்கடிக்குள்ளானால் அதில் அரசியல் இலாபம் தேடவே எதிர்க்கட்சியினர் முயற்சிக்கிறார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியற்ற நிலைமை ஏற்பட்டவுடன் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று பாம்பு ஊடகம் ஒன்று பதற்றமான செய்தியை வெளியிட்டு வரிசை நிலையை ஏற்படுத்தியது.யதார்த்த நிலையை விளங்கிக் கொண்ட மக்கள் இந்த பாம்பு ஊடகத்துக்கு எதிராக பேசினார்கள். தற்போது அந்த ஊடகம் வரிசையில் இருந்தவர்களை விமர்சித்து செய்தி வெளியிடுகிறது .

இப்ராஹிம் பற்றி எதிர்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். இந்த இப்ராஹிம் யாருடைய ஆட்சியில் விடுவிக்கப்பட்டார் என்பதையும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் எதிர்க்கட்சியினர் குறிப்பிட வேண்டும். 2022.05.25 ஆம் திகதி நாமல் ராஜபக்ஷவின் சித்தப்பாவான கோட்டபய ராஜபக்ஷவின் ஆட்சியில் தான் இப்ராஹிம் விடுவிக்கப்பட்டார். இவர்கள் தற்போது இதனை குறிப்பிடுவதில்லை.

யாரை விடுவிக்க வேண்டும், யாரை கைது செய்ய வேண்டும் அரசாங்கத்தால் தீர்மானிக்க முடியாது. நீதிமன்றத்தின் தீர்மானங்களுக்கு அமைவாகவே அனைத்தும் இடம்பெறும்.அண்மையில் கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரி தொடர்பிலும் பேசுப்படுகிறது. முறையான விசாரணைகளுக்கு அமைவாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விடயத்தில் எதிர்க்கட்சியினர் ஏன் கலக்கமடைகிறார்கள் என்று தெரியவில்லை என்றார்.