உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தடை செய்யப்பட்ட ஐந்து இஸ்லாமிய அமைப்புகள்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தடை செய்யப்பட்ட ஐந்து இஸ்லாமிய அமைப்புகள் மீதான தடையை நிபந்தனைகளுடன் நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஒருவருடகால விசாரணையின் பின்னர் விசாரணை மற்றும் புலனாய்வு அமைப்புகளின் நிபுணர்கள் குழுவொன்று வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் அரசாங்கம் இந்த தடையை நீக்கவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏப்பிரல் 2021ம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஐந்து இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்தார்.பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஆறுபேருக்கு எதிராகவும் தடைகளை அறிவித்தார்.

புலனாய்வு அமைப்புகளுடனான பேச்சுவார்த்தைகளின் போது இந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்கள் உறுப்பினர்களின் நடவடிக்கைகளிற்கு தாங்கள் பொறுப்பு என்ற வாக்குறுதியை வழங்கியுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தடைகள் நீக்கப்பட்ட பின்னரும் இந்த அமைப்புகளை உன்னிப்பாக கண்காணிக்கவேண்டும் என நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது குறிப்பாக அவர்களிற்கான நிதி மற்றும் அவர்களின் கற்பித்தல் நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்கவேண்டும் எனவும் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

இந்த அமைப்புகள் ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தடைகளை மீண்டும் விதிக்கவேண்டும் எனவும் நிபுணர்குழுபரிந்துரைத்துள்ளது.