2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலானது, இலங்கையின் மிகவும் மோசமான மற்றும் ஊழல் நிறைந்த அரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டிய ஒரு தருணமாகும். இத்தகைய கொடூரமான குற்றங்களைச் செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தராதரம் பார்க்காமல் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் மக்களுக்குப் பொறுப்புக்கூறக்கூடிய ஒரு உண்மையான அரசியல் சூழல் நாட்டில் உருவாகுமென கத்தோலிக்கத் திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை ஜூட் கிருஷாந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
2019ஆம் ஆண்டு இதுபோன்றதொரு உயிர்த்த ஞாயிறு தினத்தில் அப்பாவி மக்கள் மீது தற்கொலை குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு ஏழு ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனாலும் இந்தத் தாக்குதலில் காயமடைந்து, ஊனமுற்றுப் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
இதன்காரணமாகவே, பாதிக்கப்பட்ட அந்த அப்பாவி மக்களுக்கு முறையான நீதி கிடைக்க வேண்டும் என்று கத்தோலிக்கத் திருச்சபை ஒன்றிணைந்து தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகிறது. உயிர்த்த ஞாயிறு தின குண்டுவெடிப்பானது நாட்டின் மிகவும் மோசமான மற்றும் ஊழல் நிறைந்த அரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டிய ஒரு தருணமாகும்.
ஆட்சியைப் பிடிப்பதற்கும், தங்களது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் எந்தவொரு கீழ்த்தரமான செயலையும் செய்யத் துணியும் கலாச்சாரத்தின் கோரமான வெளிப்பாடே இந்தத் தாக்குதலாகும். எனவே, நாம் கோரும் நீதி என்பது இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் மட்டுமல்லாமல், இந்த நாட்டின் ஒட்டுமொத்த ஊழல் அரசியல் கலாசாரத்தையும் மாற்றுவதற்கானதுமாகும்.
இத்தகைய கொடூரமான குற்றங்களைச் செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தராதரம் பார்க்காமல் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் மக்களுக்குப் பொறுப்புக்கூறக்கூடிய ஒரு உண்மையான அரசியல் சூழல் நாட்டில் உருவாகும். உயிர்த்த ஞாயிறு தின வழிபாடுகளின் போது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகப் பொலிஸ் திணைக்களமும் முப்படையினரும் இணைந்து விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன. மக்கள் எவ்வித அச்சமும் சந்தேகமும் இன்றி அமைதியான முறையில் ஆலயங்களுக்குச் சென்று தங்களது மத வழிபாடுகளை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.





