உயிர்த்த ஞாயிறு தினத்தன்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல் துறை மா அதிபர் உத்தரவு!

புனித வெள்ளிக்கிழமையான 29 ஆம் திகதியும்  உயிர்த்த ஞாயிறு தினமான 31 ஆம் திகதியும்  நாட்டிலுள்ள  அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் வரும் யாத்திரீகர்கள் மற்றும் அவர்களது பயணப்பொதிகளை சோதனையிடும் விசேட வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடி நடைமுறைப்படுத்துமாறு காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து காவல் துறை பிரிவுகளுக்கும் பொறுப்பான சிரேஷ்ட காவல் துறை அத்தியட்சகர்களுக்கு காவல் துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதன்படி, சமூக காவல் துறை குழுக்கள், அந்தந்த தேவாலயங்களின் பாதிரிமார்கள் மற்றும் அமைப்பாளர்களுடன் இணைந்து வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு  காவல் துறை மா அதிபர் சகல பிரிவுகளுக்கும் பொறுப்பான சிரேஷ்ட காவல் துறை அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.